மொரீசியசில் தமிழர் – தமிழர் வாழும் நாடுகள் 2


1. முதலாவது கட்டம் :

1728-ஆம் ஆண்டு பெநுவா தூய்மா என்பவர் மொரீசியசின் ஆளுனராகப் பதவியேற்றார். இவர் முன்பே புதுச்சேரியில், பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராக இருந்தார். இவரால், முதன் முதலாக 275 தமிழர்கள் மொரீசியசில் குடியேற்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 108 பேர் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குட்பட்ட இளைஞர்கள். 95 பேர் கைவினைத் திறம் பெற்ற தொழிலாளர்கள். இவ்வரலாற்றுக் குறிப்பின்படி ஆப்ரிக்க அடிமைகளுக்குப் பின்னர் மொரீசியசுக்கு வந்த முதலாவது பிற இனத்தவர் தமிழர்களேயாவர்.

1735-ஆம் ஆண்டு மயே தெ லபோர் தொன்னே புதுச்சேரியிலிருந்து கப்பல் கட்டுவதற்காகவும் கட்டங்கள் கட்டுவதற்காகவும் தமிழர்களை அழைத்துச் சென்றார். இத்தமிழர்கள் போர்ட்லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஆப்ரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. பிரான்ஸ் தீவை (மொரீசியஸ்) ஒரு நாடாக உருவாக்கியவர் லபோர் தொன்னே. இவரது சீரிய பணிகளுக்கு உதவியாக நின்றவர்கள் தமிழர்கள். “இத்தமிழர்கள் கைவினைத் திறமும் சிறந்த தொழில் நுட்பமும் உடையவர்கள் என்றும் மொரீசியஸ் வளர்ச்சியில் இவர்களது பங்கு கணிசமானது” என்று வரலாற்றாய்வாளர் முனிந்திரநாத் வர்மா குறிப்பிடுகிறார். லபோர்
தொன்னேயின் நண்பரும், ‘பாலுவும் வர்ஜினியாவும்’ என்ற காதல் காவியத்தின் ஆசிரியருமான பெர்னார்தென் தென் சென் பியே “புதுச்சேரியிலிருந்து வந்த தமிழர்கள் சாதுவானவர்களாகவும், பண்புடையவர்களாகவும் இருந்தனர்” என்று குறிப்பிடுகிறார். பல தமிழர்கள் இக்காலத்தில் அலுவலங்களில் பணிபுரிந்ததை நபால் குறிப்பிடுகிறார்.

பிரஞ்சுக்காரர்கள் காலத்தில் போர்ட் லூயிஸ் நகரம் மூன்று பிரிவுகளாக இருந்தது. கிழக்குப் பகுதியில் ‘மலபாரிகள்’ என்றழைக்கப்பட்ட தமிழர்களும் பிற தென்னிந்தியரும் வாழ்ந்தனர். இப்பகுதியை பிரஞ்சுக்காரர்கள் ‘மலபாரிகள் முகாம்’ (Camp des Malabars) என்றழைத்தனர்.

1810-ஆம் ஆண்டு பிரஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நடந்த போரில் இருவர் பக்கமும் நின்று தமிழர்கள் போராடியுள்ளனர். ஆங்கிலேயர் தம் படைக்கு ‘உச்சமுடி’ என்ற தமிழரை தளபதியாக்க எண்ணி இருந்ததை அறிய முடிகிறது.

1829 முதல் 1830 வரை நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சென்னை துறைமுகம் வாயிலாக மொரீசியசில் குடியேற ஃபர்குவார் என்ற ஆங்கிலேயர் ஏற்பாடு செய்தார். 1833-ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு மொரீசியசில் அமுலாக்கப்பட்டது.

2-ஆம் கட்டம் :

தமிழர்களின் இரண்டாவது கட்டக் குடியேற்றம் 1835-ஆம் ஆண்டிலிருந்து தொடக்கம் பெற்றது. 1843-ஆம் ஆண்டு மட்டும் 14,634 பேர் குடியேறினர். 1845 முதல் 49 வரை சென்னைத் துறைமுகம் வாயிலாக குடிபெயர்வு நடைபெறவில்லை. 1843-ல் இருந்து 52 வரை 30,334 பேர் குடிபெயர்ந்ததாக அறிகிறோம். குடிபெயர்ந்த தமிழர்களில் பறையரும், வன்னியரும் அதிகமிருந் தனர் என்று பினியோ குறிப்பிடுகிறார். ஒப்பந்த முறையில் குடியேறிய தமிழர்கள் அனைவரும் கரும்புத் தோட்டத்தில் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். முகவர்கள் (Agents) குடியேறுபவர்களுக்கு ஆசைகாட்டி அழைத்து வந்து ஏமாற்றியதை உணர ஆரம்பித்து, அதன் விளைவாக பிற்காலத்தில் பல்வேறு தொழில்களும் செய்பவர்களாக இவர்கள் மாறினர். தோட்டத்தில் இவர்கள் பட்ட பாட்டை ‘கரும்புத் தோட்டத்தில்’ என்ற பாரதியின் பாடல்கள் மூலம் உணரலாம்.

“……அவர் விம்மி விம்மி விம்மி அழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே! -துன்பக்கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? -அவர் விம்மியழவும் திறங்கெட்டுப் போயினர்” “1810-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரீசியஸ் தீவைக் கைப்பற்றியதும் மொரீசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரம் சவரிமுத்து, சின்னத் தம்பி, துரைச்சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென குடியேறினர். மொரீசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டை நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்து விட்டனர் என்றே கூறவேண்டும்” என்கிறார் தனிநாயகம் அடிகளார்.

3-ஆம் கட்டம் :

மொரீசியசின் தலைநகரமாக போர்ட் லூயியின் மத்திய சந்தையிலேயே ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிகம் செய்து வந்தனர். இச்சந்தை 1845-இல் திறக்கப்பட்டது. 1853-இல் காப்ரீசி என்ற கப்பலிலும், 1854-இல் ஆஸ்திரேலியா என்ற கப்பலிலும் 1855-இல் ஆர்லிகென் என்ற கப்பலிலும் தமிழ் வணிகர்கள் மொரீசியஸ் வந்தனர். 1862-66 குள் 749 வணிகர்கள் வந்ததாக குறிப்புண்டு. சிறந்த வணிகர்களாக இராம சூரியமூர்த்தி குறிப்பிடுபவர்கள் : எம். கைலாசம் பிள்ளை நல்லசாமி மருதை படையாச்சி, ஏ. சிவராமன், பரிமணம், ஜி.பொன்னுசாமி, டி. வேலாயுதம் பிள்ளை, முதலியோர்.

1860-ஆம் ஆண்டு மொரீசியசிலிருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது, பல தமிழ் வணிகர்களும் குடிபெயர்ந்தனர் அவர்களில் ஏ.எஸ்.அய்யாசாமி, ஏ.ஆர். நல்லதம்பி, எம். பொன்னுசாமி, ஆறுமுகம் செட்டி அண்ட் கோ, வையாபுரி செட்டி கம்பெனி, ஐ.வேலாயுதன் அண்ட் கோ, இருளப் பிள்ளை அண்ட் கோ ஆகியோர், தென்னாப்பிரிக்காவுக்கும், புதுச்சேரி, ரீயூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்றனர்.

source : tamilsurangam.in


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *