தகவல் தொடர்பில் தமிழ்
வானொலி :
மொரீசியசு வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினந்தோறும் அரைமணிநேரம் நடை பெறுகிறது. மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மொரீசியஸ் கலைஞர்கள் தமிழகக் கலைஞர்களின் அரைமணி நேர நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகின்றது. தை பூசக் காவடி திருவிழாவுக்கு முந்திய நாள் இரவு பத்து மணிமுதல் மறுநாள் காலை ஆறு மணிவரை முருகன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் காலை பத்துமணியளவிற்குச் சிறப்பு நிகழ்ச்சி உண்டு.
தொலைக்காட்சி :
மாதத்தில் இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உண்டு. தமிழ் புத்தாண்டு நாளில் தொலைக் காட்சி ஒளிபரப்பு வெளி ஒளிபரப்பாக இடம் பெறுவதுண்டு. தமிழ்த் திரைப்படமும் காண்பிக்கப் படுகிறது.வானொலி, தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் முறையாகக் கற்றுத்தரப்படுகிறது. மொரீசியஸ் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அமைப்புகள் :
மொரீசியஸ் தமிழ் கழகம் : இதில் 5800 பேர் உறுப்பினர்கள். தமிழ்க் கோயில் கூட்டுறவுச்சங்கம் (Tamil Temple co-operative Society) உலகத்தமிழ் பண்பாட்டுக் கழகம் முதலியவை உண்டு. உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகம் தம் இரண்டாவது மாநாட்டை 1980-ஆம் ஆண்டு இங்கு நடத்தியது. மாநாட்டின் நினைவாக மொரீசியஸ் அரசு அஞ்சல் தலை, வெளிநாட்டுக் கடிதம் போன்றவைகளை வெளியிட்டது. தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிச் சிறப்பு இதழையும் வெளியிட்டன.மொரீசியசு தமிழ் எழுத்தாளர் சங்கம் உள்ளது. இதன் தலைவரான நாராயணசாமி திருமலைச் செட்டி, கல்வி அமைச்சரோடு இணைந்து, அரசு பொறுப்பில் பல தமிழ் கவிதை, கட்டுரைப் போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.1985-ஆம் ஆண்டு மொரீசியசு தமிழர் கழகம் 250-வது ஆண்டு மொரீசியசுத் தமிழர் குடியேற்ற நினைவு விழாவை ஐந்து நாட்கள் நடத்தியது. மேலும் இங்குள்ள பிற சங்கங்கள்: இந்தோ மொரீசியர் கத்தோலிக்கர் சங்கம், தமிழ் மகளிர் சங்கம், மொரீசியஸ் தமிழ் ஐக்கிய சங்கம் ஆகியன.
தமிழர் சாதனைகள்
தமிழர்கள் உதவியுடன் சாலைகள், வீடுகள், கூட்டுக் குடியிறுப்புக்கள், கோட்டைகள் கட்டப்பட்டன. துறைமுக வளர்ச்சியிலும், கப்பல் கட்டும் தொழிலிலும் தமிழர்கள் பங்கேற்றனர். இன்று போர்ட்லூயிஸ் துறைமுகத்தில் அன்று தமிழர்கள் கட்டிய கட்டடங்களைக் காணலாம். கரும்புத் தோட்டங்கள், பருத்திச் செடிகள், அவுரிச் செடிகள் வளர்ச்சியடைவதற்காக பல்லாயிரம் தமிழர் பணிபுரிந்தனர். கரும்பு ஆலைகளும் தோன்றி வளர்ச்சியடைந்தன. இன்று மொரீசியசில் நாம் பார்க்கும் வளர்ச்சியின் அடித்தளமாக தமிழர் உழைப்பு இருந்ததை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.
அ) இராஜ ரத்தினம் முதலியார் :
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆங்கில அரசிடம் தெரிவிக்க ஸ்டீவென்ஸ் என்றஆங்கிலேயருடன் சேர்ந்து கோரிக்கை மனுவை எழுதி நாடெங்கும் பரவி இருந்த இந்தியத் தொழிலாளர்களிடம் இருந்து கையொப்பம் பெற்று 1871 ஆம் ஆண்டு கவர்னரிடம் அனுப்பிய வர்களில் இவரும் ஒருவர்.
ஆ) தம்பு நாயுடு:
1901-ஆம் ஆண்டு காந்திஜி மொரீசியஸ் வந்த போது அங்கு குடியேறிய இந்தியர்களின் பிரச்சினைகளை காந்திக்கு எடுத்துக் கூறியவர்.
இ) துளசிங்க நாவலர் :
வெ.அ. துளசிங்க நாவலர் மொரீசியசின் முதல் தமிழ்க் கவிஞராவார். இவர் பன்மொழிப் புலவராவார். சிறந்த சொற்பொழிவாளரானதால் ‘நாவலர்’ என அழைக்கப்பட்டார். நாடக ஆசிரியரும், பத்திரிக்கையாளரும் ஆவார். படைவீரராக இருந்து இலக்கியத் துறைக்கு வந்தவர். 1915 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.
ஈ) பண்டிதர் பெருமாள் சுப்பராயன் :
ஏழு மொழிகளைக் கற்றவர். தோட்டத் தமிழரின் இழிவை ஒழிக்கப் பாடுபட்டவர்களின் முக்கியமான இலக்கியவாதி. தம் ஐந்து வயதில் கடலூரிலிருந்து மொரீசியஸ் சென்று குடியேறியவர். திரு.வி.க.வின் சீடர். 1943-ஆம் ஆண்டு தொழிலாளரைக் கொன்ற ஆங்கிலேயரை கடிந்து பல பாடல்களைப் பாடியவர். இவர் பாடல்களில் சமூக விமர்சனம் நிறைந்திருக்கும் ‘ராவெங்கார்’ என்ற பிரஞ்சு நாவலை மொழிபெயர்த்துள்ளார்.
source : tamilsurangam.in