விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். முதலாம் இராசராசன் காலத்தில், மனக்காணமான இராசராசப் பேரளம் என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில், சிறுபாணாற்றுப்படை நூலில், இப்பகுதி ஒய்மாநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஒய் மாநாட்டில் அகில், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்கள் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் எனத் தெரிகிறது. மரக்காணம்கோயில் – சோழர்காலக் கல்வெட்டு முதலாம் இராசராசனின் கல்வெட்டுகளில், இப்பகுதியைக் குறிக்கும் போது, ஒய்மாநாட்டு,பட்டினநாட்டு,தேவதானம் என்றும், முதலாம் இராசேந்திரன் கல்வெட்டில், ஒய்மாநாட்டுப் பட்டின நாட்டுப்பட்டினம் என்றும் குறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில், எயிற்பட்டினம் என்று வருவதைக் காண முடிகிறது. சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும் போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும். கொற்கை பாண்டிநாட்டுத் துறைமுகம்.புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டுத்துறைமுகம் எயிற்பட்டினம் ஓய்மானாட்டுத் துறைமுகம். நீர்ப்பெயற்று தொண்டைநாட்டுத் துறைமுகம்.மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்றும் பெயர் உண்டு. அதனால்,அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுகநகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை சோபட்மா (சோபட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர். சோஎன்னும் சொல் மதிலைக் குறிக்கிறது அண்மைக்காலத்துக்கு முந்தைய இந்திய வரலாற்றில், மூன்று முறை நகரமயமாதல் நிகழ்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் கூறுவர்.இதில் இரண்டாவது நகரமயமாதல், பொ.ஆ.மு. 600 – பொ.ஆ. 200 காலகட்டத்தில் தழைத்தது.அப்போது, சங்ககால நகரங்கள் எழுச்சி பெற்றன. மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரிக்கமேடு, குடிக்காடு, மரக்காணம் உட்பட பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்விலிருந்து, நகரமயமாக்கலுக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. இவ்அகழாய்வுகளின் வழி, இவ்வூர்கள் காலத்தால் பொ.ஆ.மு. 5-ம்நூற்றாண்டில் இருந்து பொ.ஆ.5-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சிறந்த விளங்கின என்பது தெளிவாகிறது. 2013 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஆழ்கடல் நீச்சல்வீரர் புதுச்சேரிக்கு அருகே கடலில் நீண்ட மதில் போன்ற ஒன்றைக் கண்டுள்ளார். ஒருமுறை கடலுக்கு அடியில் சென்ற பொழுது தற்செயலாக தட்டுபட்டது தான் அந்த சுவர் போன்ற அமைப்பு ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு அரவிந்த்வால் என்று பெயரிட்டேன் என்றார். தொடர்ந்து, பெருங்கடற்பண்பாட்டு ஆய்வுநிறுவனத்தை நடத்திவரும் ஒரிசாபாலுவிற்குத் தெரிவிக்க, அவர் குறிப்பிட்டபகுதியில் கடல் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அவர் சிலமாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச்சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில் தான் இது அழிந்து போன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுகுறித்து அவர் கூறியது தமிழர்கள் கடல்வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒருபகுதி அரிக்கமேடு முகத்துவாரம்வரையிலும் அடுத்தப்பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பைவரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்றுவரும் வகையிலான ஒருகால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில்சுவர் ஒருகோட்டையின் சுவராக அல்லது கடல்நீர்தடுப்புச் சுவராக இருக்கலாம்.புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக்கடல் விழுங்கிய சங்ககால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத்தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழகதொல்லியல்துறையும், தஞ்சை தமிழ்பல்கலைக்கழகமும் இந்திய கடல்சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவிர, இந்தசுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக்கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிரூபிக்கப்படும் என்றார்.ஒரிசாபாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்து போன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்தநகரத்தை கிரேக்கர்கள் மரிக்கனா என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார்கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்து போன நகரஇடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டணத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர்நத்தத்தனார் புகழ்ந்து அந்தப்பாடலை எழுதியிருக்கிறார். அந்தபாடலில் மதிலொடு பெயரியப்பட்டினம் என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது. அலைநீர்த்தாழை அன்னம்பூப்பவும்,தலைநாள் செருந்திதமனியம்மருட்டவும் கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் நெடுங்கால் புன்னை நித்திலம்வைப்பவும்,கானல் வெண்மணல் கடல்உலாய் நிமிர்தர 150.பாடல் சான்ற நெய்தல் நெடுவழி, மணிநீர்வைப்பு, மதிலொடுபெயரிய, பனிநீர்ப்படுவின், பட்டினம்படரின் சிறுபாணாற்றுப்படை.
பகுதி-17
நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும்.அதனை அடைய நெய்தல் நிலப்பெருவழியில் செல்ல வேண்டி வரும்.அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும். அன்றுபூத்தசெருந்திப்பூக்கள் பொன்கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும். முண்டகப்ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக்கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்துமுத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற்கானல் வெண்மணலில் கடல்லைவந்து உலாவிக் கொண்டிருக்கும்..அந்தநெய்தல் நிலப்பொருவழியில் சென்றால் கடலின்மணி நீர்சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரியபட்டினம். (மதில் = எயில் | மதிலின்பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்)அங்குச்சென்றால்.நத்தத்தனாரின் சங்க இலக்கியப்பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவது போன்ற பெரியமரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்டமீனும் பழம்பேடு (பழச்சாற்றுகள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சான்றுகள்.
தி இந்து நாளிதழ் சிறுபாணாற்றுப்படை
பல்லாயிரம் ஆண்டுகளாக கடலுக்கடியில் புதையுண்டுள்ள புகழ்பெற்ற தமிழர் நகரான எயிற்பட்டினம் !