தமிழகம் வந்த சமணர்கள் தங்கி இருந்து பணி செய்யவும், மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்திடவும் ஏற்ற மலை வாழிடங்கள் மதுரை பகுதியைச் சுற்றிலும் நிறைந்திருந்தன. எண்ணற்ற தமிழ் இலக்கியப் படைப்புகள் கொடுத்த சமணர்கள், தமிழ் தலைநகரான மதுரையைத் தேடியதில் ஆச்சர்யமில்லை. சங்க காலத்திலேயே சமணத் தலங்களாக மதுரையைச் சுற்றிய 14 மையங்கள் திகழ்ந்தன. இங்குள்ள கற்படுக்கைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சிற்பங்கள் இன்றும் பழமை வரலாற்று ஆதாரம் காட்டி நிற்கின்றன.

மதுரையின் மாங்குளம், அரிட்டாபட்டி, திருவாதவூர், கிழவளவு, வரிச்சியூர், கருங்காலக்குடி, அழகர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், முதலைக்குளம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி என எங்கெங்கும் சமணம் மணக்கிறது. சிவகங்கையில் திருமலை, குன்றக்குடி, புதுக்கோட்டையில் சித்தன்னவாசல், குடுமியான் மலை, நெல்லையில் மறுகால்தலை, அய்யனார்குளம்(மன்னார் கோயில்) என தென்மாவட்டம் முழுக்க சமண ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.
source : dinakaran.com