ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் குண்டாற்றின் கரையில் நான்கு விதமான தொல்லியல் களங்களில் நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் ஆகியவற்றை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
கமுதி பேரையூரைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, பொறியாளர் த.சங்கர் ஆகியோர் தங்கள் ஊரில் திடல்காடு, செம்மண்காடு, செங்கமடைராஜா கோயில், கலுங்கு முனியப்பசாமி கோயில் ஆகிய பகுதிகளில் கள மேற்பரப்பாய்வு மூலம் பழங்காலப் பொருள்களைக் கண்டெடுத்து, அதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.