ராயக்கோட்டை அருகே 2,500 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி:

ராயக்கோட்டை அருகே மலை உச்சியில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை அறம் வரலாற்று ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த ஓவியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராயக்கோட்டை அருகே, கெட்டூர் கிராமத்தில் உள்ள மலை  உச்சியில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான, 50க்கும் மேற்பட்ட வெள்ளை  மற்றும் செந்நிற பாறை ஓவியங்கள் உள்ளன. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட தொல்லியல்  ஆய்வாளர்கள் பூங்குன்றன், சுப்பிரமணி, ராஜன் மற்றும் அறம் வரலாற்று ஆய்வு குழுவை சேர்ந்த அறம் கிருஷ்ணன், பிரியன், மஞ்சுநாத், கணபதி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து  அறம் வரலாற்று ஆய்வு குழு தலைவர் அறம் கிருஷ்ணன் கூறியதாவது: ராயக்கோட்டை கிருஷ்ணகிரி சாலையில், கெட்டூர் கிராமத்தில் 750 அடி உயரத்தில் இந்த மலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பழமையான வெள்ளை மற்றும் செந்நிற பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் பாறையின் கீழ் மழைநீர் பட்டோ, கால மாற்றத்தினாலோ அழிந்து காணப்படுகிறது. அதில், 2 மயில்களின் உருவம் பிரமாண்டமாக வரையப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மயில்கள் அதிகமாக வாழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளதை அந்த ஓவியம் காட்டுகிறது.

மேலும், யானை ஓவியமும் உள்ளது. நிறைய சிந்து சமவெளி குறியீடுகளும் உள்ளன. குதிரையில் ஒருவர் அமர்ந்திருக்க, மற்றொருவர் அந்த குதிரையை பிடித்து அழைத்து செல்வது போன்ற காட்சியும், குதிரை மீது அமர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகளும், இங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த மக்களின் தொழில், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை முறை அனைத்தையும், இந்த பாறை ஓவியங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பாறை ஓவியங்களை  பாதுகாக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

source : dinakaran.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *