14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு பேரிகையில் கண்டுபிடிப்பு!

சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, பாகலுார் செல்லும் வழியில், 15வது கி.மீ., யில் உள்ளது பேரிகை கிராமம். இங்குள்ள ஏரியில், அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர் நடத்திய கள ஆய்வில், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரசனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பேரிகை ஏரியின் கிழக்கு கரைப் பகுதியில், நான்கு அடி உயரம், இரண்டு அடி அகலமுடைய துாண் உள்ளது. அதன் மூன்று பக்கங்களிலும், கல்வெட்டுகள் உள்ளன. அவை, ஒய்சாள அரசின், கடைசி அரசனான, வீர வல்லாளன் ஆட்சி காலத்தைச் சார்ந்தவை.

முன் பக்க கல்வெட்டை மட்டும், 1975ல், தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. அக்கல்வெட்டுகள், 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவை. முன், பின் பக்கங்களில், தலா, 13 வரிகளும், வலப்பக்கத்தில் ஆறு வரிகளும் உள்ளன. துாணின் மேல்பகுதியில், இரண்டு அடுக்குகளுடன் குத்து விளக்குகளும், இரண்டு உடுக்கைகளும், நடுவில் திரிசூல குறியீடும் உள்ளன. கல்வெட்டில், திருவத்தீசுரமுடைய நாயனாருக்கு, கோவில் செலவுக்காக, நிவந்தம் என்ற நில தானம் கொடுக்கப்பட்டது மற்றும் அவ்வூர் சிவன் கோவிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட நில எல்லைகள் குறித்த, விபரங்கள் உள்ளன. இவ்வாறு அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர், கூறினார்.

source : worldtamilforum.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *